Tuesday 26 December 2023

நிழலும் நிம்மதியும் . .

 நிழலும் நிம்மதியும் . .

ஒருவன் வேகமாக
ஓடி வந்தான்.
எதிரே ஒரு முனிவர் வந்தார்.
ஏனப்பா இப்படி
தலைதெறிக்க
ஓடி வருகிறாய் என்று கேட்டார்.
என்னை துரத்திக் கொண்டு வருகிறது ஐயா என்றான் அவன்.
ஏதாவது நாய் துரத்திக் கொண்டு வருகிறதோ என்று நினைத்து அவனுக்கு பின்னால் பார்த்தார் முனிவர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் தெரியவில்லை.
எதுவும் இல்லையே என்றார்.
நல்லா பாருங்க என்றான் அவன்.
பார்த்துவிட்டு தான் சொல்கிறேன் என்றார் முனிவர்.
இதோ பாருங்கள்
இதுதான் என்னைத் துரத்துகிறது என்று சுட்டிக்காட்டினான். அந்த இடத்தில் அவனுடைய நிழல் இருந்தது.
என்னப்பா சொல்றே என்று கேட்டார் முனிவர் கொஞ்சம் சந்தேகமாக.
அதன்பிறகு அவன் விபரமாகச் சொன்னான் எனக்கு நிழலைக் கண்டால் பிடிப்பதில்லை. எப்போது பார்த்தாலும் என்னைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இதை என்னால் சகிக்க முடியவில்லை. அதனிடமிருந்து பிரிவதற்கு எவ்வளவு முயற்சிகள் பண்ணிப் பார்த்துவிட்டேன். முடியவில்லை என்றான்.
அப்படி என்ன முயற்சிகள்
செய்தாய் என்று கேட்டார் முனிவர்.
ஒரு பெரிய குழியைத் தோண்டி அதிலே என்னுடைய நிழலைப் புதைத்து விடலாம் என்று முடிவு செய்து மண் வெட்டி எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு போனேன். ஆழமான குழியைத் தோண்டினேன். குனிந்து பார்த்தேன். அந்த குழிக்குள்ளே நிழல் தெரிந்தது . இதுதான் சமயம் மண்ணைப் போட்டு மூடி விடலாம் என்று நினைத்து கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டேன். இப்போது நிழல் மண்ணுக்கு மேலே வந்து இருந்தது. இது என்னடா வம்பா போச்சு என்று சொல்லி அவசரம் அவசரமாக மண்ணை அள்ளிப் போட்டேன். குழி பூராகவும் நிரம்பிவிட்டது. மறுபடியும் நிழல் மேலே வந்து உட்கார்ந்து இருந்தது.
சரி இதை குழியில் புதைக்க முடியாது என்று முடிவு பண்ணி இங்கே விட்டுவிட்டு ஓடி விடுவோம் என்று நினைத்து ஓடினேன் .அது காலை நேரம் இவன் மேற்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்தான். ஓடி ஓடி பார்க்கிறான் . நிழல் இவனை விட வேகமாக இவனுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறது.
சரி திரும்பி ஓடிப் பார்ப்போம் என்று நினைத்து அப்படியே திரும்பி ஓட ஆரம்பித்தான். இப்போது நிழலை காணவில்லை. கொஞ்ச தூரம் ஓடி விட்டுப் பின்னால் திரும்பிப் பார்த்தான். பின்னாலேயே நிழல் துரத்துகிறது.
இப்படி ஓடி வரும்போது தான் முனிவர் இவனை நிறுத்தியிருந்தார்.
இந்த நிழலை துரத்த
ஒரு வழி சொல்லுங்கள் ஐயா என்றான் .
முனிவர் சொன்னார் அங்கேயும் இங்கேயும் ஓடாதே . அப்படியே கீழே படுத்துக் கொள் என்றார் . அவன் அப்படியே படுத்துக் கொண்டான். அப்படியும் இப்படியும் திரும்பிப் பார்த்தான். நிழலைக் காணவில்லை. இப்போது தான்
நிம்மதியாக இருந்தான்.
எல்லா மனிதர்களும் இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
நான்
எனது
என்கின்ற ஆணவம்
அவர்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது.
அதை விட்டு விட்டு ஓட வேண்டும் என்று நினைத்தாலும் அது முன்னால் வந்து நிற்கிறது.
பரம்பொருளை நோக்கி ஓடும் போது இந்த ஆணவம் பின்னால் வந்து விடுகிறது.
தன்னை உணர்ந்து
மனிதனுக்கு விடுதலை உணர்வு ஏற்படுகின்ற நேரத்திலே அதாவது பரிபூரண சரணாகதி என்கின்ற நிலையிலே அது முழுவதுமாக மறைந்து விடுகிறது. அப்படிப்பட்ட
சுதந்திர மனிதர்களாக எல்லோரும்
மாறி விட்டால் இந்த உலகமே இன்பமயம் தான்.

No comments:

Post a Comment