Tuesday 25 July 2023

சுறுசுறுப்பு.

 சுறுசுறுப்பு.

தவறான திட்டமிடல்களே காலதாமதத்தின் முக்கியக் காரணி, "எதையுமே பிளான் பண்ணிப் பண்ணனும்", னு ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நகைச்சுவையாகக் கூறினாலும், அதுதான் உண்மை.
ஒரு செயலை செய்வதற்கு முன்னரே, அதற்கான காலக்கெடு, தேவையான ஆதாரங்கள் ஆகியவை பற்றியத் தெளிவான திட்டமிடல் வேண்டும்.
சரியாகத் திட்டமிட்டு, நேர்மையான செயல்பாடுகளால் ஒரு செயலை வெற்றிகரமாக குறித்தக் காலத்துக்குள் செய்து முடிக்க முடியும்.
ஒரு சில அரசு அலுவலர்கள், உயரதிகாரிகள் ஆகியோர்கள் எந்த வேலையும் குறித்த காலத்தில் செய்யாமல் காலதாமதமாகவே செய்கின்றார்கள்.
இந்தக் காலதாமதத்தால் தனக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்கின்ற போது அவர்களுக்கு ஒருவித கவனக்குறைவான மனப்பான்மை உண்டாகிறது.
சரியான திட்டமிடல் இல்லாமல் உண்டாகும் காலதாமதம் கூட ஒருவருக்கு மிகச்சிறந்த அனுபவப் பாடத்தைக் கொடுக்கும்.
காலம் தவறாமை என்பது தலைமைப் பண்புகளில் மிக முக்கியமானது.
ஒரு இடத்திற்கு மேலதிகாரிகள் சரியான நேரத்துக்கு வந்தால் தான், அவருக்குக் கீழே வேலை செய்பவர்களும் குறித்த நேரத்திற்கு வருவார்கள்.
ஆம் முதலில் பொறுப்பில் உள்ளவர்கள் காலம் தவறாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
சிக்கலகள் இந்த இடத்தில் இருந்தே தொடங்குவதால், இதைச் சரி செய்து விட்டாலே எல்லா வேலைகளும் சிறப்பாக நடைபெறும்.
காலம் தவறாமைக்கு மற்றொரு முக்கிய எதிரி "தள்ளி வைத்தல்".
எந்த ஒரு செயலையுமே தள்ளி வைத்தால், நிச்சயமாக
அது காலதாமதத்தில் கொண்டு சேர்த்து விடும்.
எதையும் பிறகு செய்யலாம் என்று தள்ளிப் போடாதீர்கள். செயல்படுவதற்குப் பொருத்தமான நேரம், இதோ இந்த விநாடி தான்.
சுறுசுறுப்பு என்கிற மருந்தே, ''தாமதம் என்ற வியாதியை'' வரவிடாமல் தடுக்கும் தடுப்பூசி.
நோய்க்கு மருந்து உண்பதைக் காட்டிலும், தடுப்பூசி போடுவதே அறிவாற்றல் அல்லவா.

No comments:

Post a Comment