Tuesday 27 July 2021

நட்பில் பல நிலைகள்.

 நட்பில் பல நிலைகள்.

ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது, நல்ல நட்பு இதயம் போல உங்களுக்கு தெரியாமலே உங்களுக்காகத் துடிக்கும்...
நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்க விடுவார்களோ அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள்...
நல்ல நண்பர்கள் உங்களுடைய மகிழ்ச்சியின்போது காணாமல் போனாலும், உங்களுடைய துயர வேளையில் உறுதியாக உங்களோடு இருப்பார்கள். தங்களைப் பற்றிய தற்புகழ்ச்சியை ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடைய உரையாடலைக் கவனமுடனும், ஈடுபாட்டுடனும் கேட்பது நல்ல நண்பனின் அடையாளம்...
சட்டென்று வருபவர்களைத் தெரியாமல் நட்பாகிக் கொண்டால் அந்த நட்பு கேடாய்தான் முடியும். 'மனம் கனத்திருக்கிறது, பணம் எனக்கு தேவையாக இருக்கிறது. எனக்கு உன் உதவி தேவையிருக்கிறது' என்று உங்களிடம் உதவி கேட்டு வரும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள்...
நட்பின் அவசியத் தேவையே உதவுவதில்தான் இருக்கிறது. ஆனால்!, அத்தகைய சூழல்களில் 'மட்டுமே' உங்களைத் தேடி வரும் நண்பர்கள் தன்நலத்தின் சின்னங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்...
அதேபோல் பதவி ஆசையில் வரும் நட்புகள் நம்முடன் இருக்கும் உயிர் நட்புகளையே விரட்டச் சொல்வார்கள். அவர்கள் நல்லப்பாம்பின் நஞ்சு போன்றவர்கள்...
நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ!, அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன். நண்பனுக்கு இன்னொருவர் துரோகம் செய்து விட்டார்கள் என்றதும், அதை அறிந்து பொங்கி எழும் புனிதமான நட்பும் இந்த உலகத்தில் இருக்கிறது...
'உங்கள் நண்பர்களுடன் பேசும்போது உங்களுடைய மனம் நேர் சிந்தனைகளில் நிறைகிறதா...? எதிர் சிந்தனைகளில் நிரம்புகிறதா...? என்று பாருங்கள்...
எதிர் சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள். சில நண்பர்களோடு பழகும்போது உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.
ஆம் நண்பர்களே
உலகின் மிகச் சிறந்த தலைவர்கள் எல்லோருக்குமே மிக உரிமையோடு உறவாடும் ஒரு மிகச் சிறந்த நண்பர் இருந்திருப்பார். ஒரு நல்ல நண்பன் ஒரு சிறந்த மனிதனை உருவாக்குகிறான். ஒரு சிறந்த நட்பு நல்ல வாழ்க்கையை காட்டுகிறது.
உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்குபேரை நினையுங்கள். அவர்கள் நல்லவர்களா...?, மோசமானவர்களா...? என இப்போது அளவிடுங்கள். தீய நண்பர்களெனில் ஒதுக்குங்கள். தீய நண்பனோடு பழகுவதை விட நண்பனே இல்லாமல் வாழ்வது சாலச் சிறந்தது. நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே!, நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள்.
எதற்காகவும் பழகிய நட்புக்கு துரோகம் செய்யாதீர்கள். அதன் வலி தாங்க முடியாதது. எல்லோரும் நல்லவராய் இருக்க முடியாது. எனக்குப் பிடித்த மாதிரி மாறினால்தான் உன்னோடு நட்பாய் இருப்பேன்' என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி விடுங்கள்.
Nalanthaa Jambulingam

No comments:

Post a Comment