Monday 12 July 2021

ஆளுமையின் அழுத்தமான அடையாளம்.

 ஆளுமையின் அழுத்தமான அடையாளம்.

உங்களையே நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டிய கேள்வி இதுதான். உங்களால் ஆளுமைமிக்க மனிதராக விளங்க முடிகிறதா?
இந்தக் கேள்வியைப் படித்த உடனேயே உங்கள் நண்பர்கள் உங்களுக்கு வேண்டியவர்கள் உங்களைப் பற்றிச் சொல்லும் பாராட்டு மொழிகளும் உங்களுக்கு கீழே பணிபுரிபவர்கள் உங்களிடம் காட்டும் பணிவும் உங்கள் நினைவுக்கு வரும்.
ஆமாம் நான் ஆளுமை மிக்க மனிதர் தான் என்று ஒரு குரல் உள்ளே எழும். இவை உங்களுக்குள் இருக்கும் ஆளுமை பண்பின் ஆரம்ப அறிகுறிகள்தான். இதுவரை சந்தித்திராத ஒரு மனிதரைப் பார்க்க நேர்கையில் பழகத் தொடங்கி 10 நிமிடங்களுக்குள் அவரை உங்களால் ஈர்க்க முடிகிறது என்றால் உங்கள் ஆளுமை பண்பு தீர்க்கமாக இருந்ததாய் பொருள்.
அறிமுகமான வட்டத்தில் மட்டுமன்றி உங்களுடன் பழக நேர்கிற மூன்றாம் மனிதருக்கோ உங்கள் பணிகளைப் பற்றி கேள்விப்படுகிற புதியவர் ஒருவருக்கும் உங்கள் மீது வியப்பு கலந்த பிரியமும் மரியாதையும் தோன்றுமே ஆனால் அதுதான் உங்கள் ஆளுமை பண்பின் அழுத்தமான அடையாளம்.
இந்த ஆளுமைப் பண்பு வளர்கிற போது உங்கள் வருகை எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. உங்கள் வார்த்தைகள் மற்றவர்களால் ஏற்கப்படுகின்றன. உங்களை தவிர்க்க நினைப்பவர்களும் பார்க்கப்படுகிறார்.
உங்கள் செல்வமோ செல்வாக்கோ சிறப்புப் பட்டங்களும் பொது இடங்களில் உங்களாலேயே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டால் அவற்றுக்கும் மதிப்பு இருக்காது நீங்களும் மதிப்பு இழக்க நேரிடும்.
உங்கள் ஆளுமையை வலிமையாக வெளிக்காட்டப் போவது உங்கள் பணிகளும் பணிவும் மட்டும்தான்.வலிமைமிக்க மனிதர் எளிமை மிக்கவராய் விளங்கும் போது தான் அவர் இருக்கும் இடமே அவரின் தாக்கத்தை உணர்கிறது. அவரைக் கூர்ந்து கவனிக்கிறது.
விரைப்பான முகம் புதைந்து போன புன்னகை அதை விட வேகமாய் சில சமயம் வெளிப்படும் செயற்கை புன்னகை உயிர்ப்பு இல்லாத ஓர் இரண்டு சொற்கள் கம்பீரம் என்று நினைத்து கடுகடுப்பாக இருக்கிற முகம் இவையெல்லாம் உங்களை மேலும் அந்நிய படுத்துவதோடு இனந்தெரியாத எதிர்ப்புணர்வை ஏற்படுத்துகிறது.
எனவே மனிதர்கள் உங்களிடம் இருந்து தள்ளி நிற்பதோடு உங்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.உங்களிடம் பயன் கருதிப் பழகுபவர்கள் மட்டுமே பணிந்தும் குழைந்தும் பேசுகிறார்கள்.
பெருக்கத்து வேண்டும் பணிவு என்கிறார் திருவள்ளுவர்”. நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் என்கிறார் கண்ணதாசன்.

No comments:

Post a Comment