உழைப்பவனை
இந்த உலகம் உதாசீனப்படுத்தியதே இல்லை!
அவனை உயர வைக்க தவறியதே இல்லை.
நாலு நாள் உழைத்து விட்டு ஐந்தாம் நாள் பலனை எதிர்பார்ப்பவர்களுக்கு இது புரியாது.
பலனை எதிர்பார்க்காதே என்கிற சூட்சமம் பலருக்கு புரிவதே இல்லை.
ஆறு நாள் கஷ்டப்பட்டு உழைத்தால் ஆறாயிரம் கைமேல் கிடைக்கும் என்பதாய் வைத்துக் கொள்வோம்.
பாதி பேருக்கு ஆறாயிரம் கையில் கிடைத்தவுடன் உழைக்க தோன்றாது.
உல்லாசம் தோன்றும்.
கைல காசு இருக்கும் போது கஷ்டப்படுவானேன் என்று தோன்றும்.
வீசி செலவு செய்ய தோன்றும்.
அப்படி செலவு செய்ததில் வேதனை தோன்றும்.
செலவு செய்வதில் இரண்டுநாள்..
செலவு செய்து விட்ட உல்லாச களைப்பில் இரண்டுநாள்..
செலவு செய்து விட்டோமே என்ற கவலையில் இரண்டுநாள்,
என்ற ஆறு நாள் பொறுத்து இன்னொரு ஆறு நாள் உழைக்கபோக,
ஓய்வு கொடுத்த சுகம் உழைக்க இடம் தராது. ஓய்வாக உழைக்க முடியாதா என ஏக்கம் தான் வரும்.
பலனை எதிர்பார்த்ததால் வந்த பாவம் இது.
உழைப்பு இடைவிடாத பயிற்சி என்று புரியாதவர்கள் செயலிது.
அது ஒரு யோக சாதனை.
யோகப் பயிற்சியின் நடுவே நிறுத்தலாகாது என்று அறியாதவர்களின் வேதனை இது.
இடைவிடாது உழைப்பவர்களுக்கு ஓய்வு சிறிதளவே போதும்.
நீண்ட ஓய்வு பயம் தரும்.
வருடத்தில் இரண்டு நாள் சும்மா இருந்தால் கூட உழைக்கும் வாய்ப்புகள் நழுவி விட்டனவோ என்று கவலை வரும்.
உழைப்பு போதையாக இருப்பவனுக்கு உல்லாசம் குமட்டல் எடுக்கும்.
உழைப்பின் பலன் ஓய்வு என்பதை மனம் ஏற்க மறுக்கும்.
ஆனால்
உழைப்புக்கு பலன் உண்டு.!
அது யாருக்கு?
அது தனக்கல்ல,
தன் குடும்பத்திற்கு..
நன்றி : ஐயன் சற்குரு எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களின் "அப்பா" நாவலில்...
No comments:
Post a Comment