Wednesday 30 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சுகி.சிவம் எழுதியது 😗
பாட்டி படுத்திருந்த திண்ணையின் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள் பேத்தி. திடீரென வானில் மேகம் சூழ்ந்து, மழை கொட்டியது.
பாட்டி, பேத்தியிடம், அடியே, எவ்வளவு தண்ணீர் வீணாய்ப் போகுது. அண்டாவை முற் றத்தில் கொண்டு வந்து வச்சு மழை தண்ணீரை நிரப்புடி என் ராசாத்தி..." என்றாள்.
போ... பாட்டி" என மறுத்தாள் பேத்தி.
அடியே, அடுக்களையில் இருக்கிற பாத்திரத்தை அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வைக்கிறது பெரிய வேலையா? போய் அண்டாவைக் கொண்டு வந்து அப்படியே வை..." என உத்தரவிட்டாள் பாட்டி. வெறுப்பாய் ஓடி, பாட்டி சொன்னதைச் செய்துவிட்டுத் திரும்பி னாள் பேத்தி. அரை மணி நேரம் மழை கொட்டியது!
இந்நேரம் அண்டா நிரம்பி இருக்கும் என ஆனந்தமடைந்த பாட்டி, திண்ணையை விட்டு முற்றத்துக்கு எழுந்து போனாள்.
பகீர் என்று ஆனது பாட்டிக்கு.
அண்டாவில் ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை. ‘அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வை’ என்று பாட்டி சொன்னதை, வேத வாக்காக எடுத்துக் கொண்டு, கழுவிக் கவிழ்த்து வைத்திருந்த அண்டாவை கவிழ்த்த வண்ணமே மழையில் வைத்து விட்டாள் பேத்தி.மழை என்னவோ வஞ்சனை இன்றிதான் பெய்தது.
பாத்திரம்தான் கவிழ்ந்து கொண்டு தண்ணீரை ஏற்க மறுத்து விட்டது.
கடவுளின் அருளும் அப்படித்தான்!
அது பொதுவாகவே அனைவருக்கும் கொட்டுகிறது.கவிழ்த்து வைத்தவர்களின் மனங்கள் அதில் ஒரு சொட்டுகூட ஏந்துவதில்லை.
திறந்த மனத்தோடு, பிரபஞ்சத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டால் பஞ்ச பூதங்களும் நமக்குச் சாதகமானவையே!!..
எண்ணம் போல் வாழ்க்கை!!
🌻 நன்றி அருணாசலம் ராமநாதன்

No comments:

Post a Comment