Thursday 9 December 2021

மதிக்க வேண்டிய மனிதர்கள்.

 மதிக்க வேண்டிய மனிதர்கள்.

முதுமையின் நிகழ்வுகளை விஞ்ஞானரீதியில் நோக்கும் போது, அவர்களுக்கு வரும் உடலியல் பாதிப்புகள் அதிகம்.
இவற்றால் உணர்வு சக்தி குறையத் தொடங்கும். இளமைக்கு எப்பொழுதுமே முதுமை பற்றிய அறிவு இருத்தல் வேண்டும்.
இந்த 21-ம் நூற்றாண்டில் வாழ நாமே தடுமாறிக் கொண்டிருக்கும் போது, வயது முதிர்ந்தோர் எதிர்கொண்டு வரும் இன்னல்கள் சொல்லி மாளாது..
இன்றைய சூழலில், முதியோருக்கான சுதந்திரம், பங்களிப்பு, வயதில் மூத்தவர்களை மதித்தல் போன்றவற்றை நடைமுறையில் முழுவதுமாக சாத்தியமாக்க இன்றைய தலையாயக் கடமை..
உலக அளவில் 2015ம் ஆண்டு நிலவரப்படி 60 வயதுக்கு மேற்பட்டோர் 75 கோடியைத் தாண்டி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
புகழ்பெற்ற புதுக்கவிதை ஒன்று உண்டு.
“வீட்டுக்கு பெயரோ அன்னை இல்லம்.
அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்”
இந்த இருவரிக் கவிதை பல சொல்ல முடியாத கதைகளைச் சொல்கிறது நமக்கு ..
அண்மைக்கால ஆய்வுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இயந்திரமான வாழ்க்கை, மேலைநாட்டு கலாச்சாரத்தின் தாக்கம் போன்றவற்றின் காரணமாக பெற்றோர் பிள்ளைகளுக்கான உறவில் விழும் விரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த இயந்திர வாழ்க்கையில் சிக்குண்ட நாம் நம் பெற்றோருடனும் மனிதருடனும் பேசும் நேரத்தைக் குறைத்துக் கொண்டே வருகிறோம்.
பெரியோர்களை மதி..!, கவனித்துக் கொள்..! என்ற அறிவுரை கூறி நம் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.
ஆம்.,நண்பர்களே
நம் தலைமுறைகளின் விழுதுகளைத் தந்த ஆலமரங்களை தலைதாழ்த்தி வணங்குவோம்.
கண்ணியமாகவும், கவுரவமாகவும் மதிக்க வேண்டிய மனிதர்கள் இவர்கள்.
வயது மிகுந்த நமது பெற்றோரையும், ஆதரவற்ற பெரியோரையும் மதித்து, ஆதரவளிக்கும் நல்ல எண்ணத்தையும் நல்லொழுக்கத்தையும் கற்றுக் கொள்வோமாக.
நாளை நமக்கு வரும் முதுமையை இன்றில் இருந்தே மதித்துப் போற்றி வாழ்வோமாக.

No comments:

Post a Comment