Friday 31 December 2021

மகிழ்ச்சியாக வாழ்ந்திடலாம் .

 மகிழ்ச்சியாக வாழ்ந்திடலாம் .

வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமானால் முதலில் உங்கள் முன்னுரிமைகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு எது வேண்டாம்? என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாம். நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்று பாருங்கள், அதனை நோக்கி வேலை செய்யுங்கள்.
உங்கள் திறமை, தகுதி, நீங்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல நிலைமை வழிக்கு வரும். எந்த விதமான வீட்டில் வாழ வேண்டும்,? எந்தவிதமான செயல் செய்ய வேண்டும்? என்று நினைப்பதை விட்டு விட்டு,
"நான் மற்றவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இருக்க விரும்புகிறேன், நலமாக, மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன்" என்று சொல்லத் தொடங்குங்கள்.
மற்ற செயல்கள் இதைச் சுற்றி தானாகச் சீரடையும்.
நீங்கள் அன்றாடம் பத்து மைல் நடக்கலாம், ஒரு விலை உயர்ந்த கார் வைத்திருக்கலாம் அல்லது ஒரு சைக்கிளில் பவனி வரலாம் - அதுவல்ல முக்கியம்
உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வது,
அதன் ஒவ்வொரு அம்சத்தையும் அனுபவிப்பது அது தான் முக்கியம், இல்லையா?
மற்ற செயல்கள் எல்லாம் வசதிக்காக நாம் செய்து கொள்ளும் ஏற்பாடுகள் மட்டுமே.
இன்னொருவரை விட நன்றாய் வாழ்வதே நல்வாழ்வு என்று, அதைப் பற்றிப்
புரிந்து கொள்ளாதவர்கள் பலர் நினைக்கிறார்கள்.
இன்னொருவரை விட நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவது நல்வாழ்வு அல்ல,
அது ஒரு நோய்.உலகை இந்த நோய் மோசமாக பீடித்துள்ளது. வேறு யாரும் வைத்துக் கொள்ள முடியாது என்பதற்காகவே பல பொருட்களை வைத்துக் கொள்ள மக்கள் விரும்புகின்றனர்.
உலகில் இருப்பதிலேயே பெரிய வைரம் உங்களுக்கு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்,
எதுவும் தெரியாமல் அதைப் பார்த்தால் அது வெறும் கல். ஆனால், சந்தையிலோ அதற்குத் தெரிந்தோ,
தெரியாமலோ ஏகப்பட்ட கிராக்கி ஏற்படுத்தி விட்டோம், மதிப்பு கொடுத்து விட்டோம்
தெருவில் கிடக்கும் ஒரு சாதாரண கருங்கல்லை நீங்கள் கவனமாகப் பார்த்தால், அதுவும் அழகாகத் தான் இருக்கிறது. நிறைய கிடைப்பதால் அதற்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டது.
உலகில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே வைரங்கள் கிடைக்கின்றன. எல்லோரும் வாங்கவும் முடியாது.
அதனால், அதைக் கழுத்தில், காதில், மூக்கில் அணிந்து கொள்கிறீர்கள். அது அழகாக இருப்பதால் அல்ல என்பதே யதார்த்தமான உண்மை.
வாழ்க்கை குறித்த தவறான கருத்துக்களால் மனித வாழ்வு விஷமாகிக் கொண்டிருக்கிறது.
இன்னொருவரை விட, நன்றாக இருக்க முயற்சி செய்து பலர் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்றனர்.
இன்னொருவரை விட நன்றாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ மனிதர்கள் தங்கள் வாழ்வை வீணாக்கி இருக்கிறார்கள்.
உங்கள் வாழ்க்கையை அப்படி வீணாக்காதீர்கள்.
இன்னொருவரை விட நன்றாக இருக்க வேண்டும் என்பதையே நினைத்துக் கொண்டிருந்தால் உங்கள் முழுத் திறன் மலராது.
ஆம்.,நண்பர்களே
வாழ்க்கையில் உங்களுக்கு எது முன்னுரிமை என்று உறுதி செய்து கொண்ட பின், அதனை விட்டு விடுங்கள்.
உங்கள் முழுத் திறனோடு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள். என்ன நடக்க வேண்டுமோ, அது நிச்சயம் நடக்கும்.

No comments:

Post a Comment