Friday 31 May 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நம்ப முடிகிறதா....
ஒடிஷாவின் பாலாசோர் தொகுதியில் இருந்து முதல்முறையாக மக்களவைக்குத் தேர்வான பிரதாப் சந்திர சாரங்கிக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது கேபினட்டில் இடம் அளித்திருக்கிறார்.
ஒடிஷா மாநிலத்தின் பாலாசோர் தொகுதியில் இருந்து முதல்முறையாக எம்.பி-யாகியிருக்கிறார் அந்த எளிய மனிதர். சைக்கிளில், கிராமங்களில் மக்களோடு மக்களாக வலம்வரும் இவர், தேர்தலின்போது ஆட்டோவில் சென்றுதான் பிரசாரம் செய்துள்ளார். சொந்த வீடோ அல்லது காரோ இல்லாத எளிமையான மனிதரான இவரை அணுகுவதும் எளிது என்கிறார்கள், ஒடிஷா மக்கள்.
முதல்முறையாக மக்களவைக்கு பா.ஜ.க சார்பில் வேட்பாளராகக் களமிறங்கிய பிரதாப்சந்திர சாரங்கிக்கு எதிராகக் களமிறங்கிய 2 வேட்பாளர்களும் மிகவும் பலம்பொருந்தியவர்கள். ஒருவர் பிஜுஜனதா தளம் சார்பில் களமிறங்கிய சிட்டிங் எம்.பி-யும் தொழிலதிபருமான ரபீந்திரகுமார் ஜெனா. பெரும் பணக்காரரான அவருக்கு சொந்தமாக News World Odisha என்ற செய்தித் தொலைக்காட்சியும் உண்டு. அவருக்கு ஆதரவாக, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கே பிரசாரம் மேற்கொண்டார்.
மறுபுறம், காங்கிரஸ் வேட்பாளர் நபஜோதி பட்நாயக். ஒடிஷா மாநில காங்கிரஸ் தலைவரான நிரஞ்சன் பட்நாயக்கின் வாரிசு என்ற அடிப்படையில் மக்களிடம் பிரபலமானவர் அவர். நபஜோதியின் சித்தப்பாவான சௌமியா ரஞ்சன் பட்நாயக், ஆளும்கட்சியான பிஜுஜனதா தளத்தின் மாநிலங்களவை எம்.பி-யாகப் பதவி வகித்துவருகிறார். ஒடிஷாவின் மிகப்பெரிய செய்தி நெட்வொர்க்கான ஈஸ்டர்ன் மீடியா லிமிட்டெட் (EML) ரஞ்சன் பட்நாயக்கிற்குச் சொந்தமானது. அம்மாநிலத்தில் அதிகம் விற்பனையாகும் சம்பாத் (Sambad) மற்றும் 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சியான கனக் டிவி (Kanak TV) ஆகியவை ஈஸ்டர்ன் மீடியாவுக்குச் சொந்தமானவை.
இந்த இரண்டு வேட்பாளர்களின் அரசியல், அதிகாரம், பணபலம் ஆகியவற்றைத் தோற்கடித்து வென்றிருக்கிறார், பிரதாப்சந்திர சாரங்கி.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இளம்வயதில் இருந்தே ஈடுபாடுகொண்ட சாரங்கி, அப்பகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். சைக்கிளில் கிராமம் கிராமமாக வலம்வந்து, தொடர்ந்து மக்களைச் சந்தித்துவந்த அவர், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக பாலாசோர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நீலகிரி தொகுதியில் இருந்து இரண்டு முறை சுயேச்சை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தவர்.
இப்பொழுது மக்களவைக்கு,பா.ஜ.க சார்பில் களமிறங்கிய சாரங்கி 12,956 வாக்குகள் வித்தியாசத்தில் கோடீஸ்வர் ஜெனாவைத் தோற்கடித்து, பலாசோர் தொகுதி எம்.பி-யாகியிருக்கிறார்.
பணக்கார வேட்பாளர்களின் செல்வத்துக்கு- தமிழர்களாகிய நம்மைப் போல -விலை போகாமல், எளிமையான, நேர்மையான மனிதரைத் தேர்ந்தெடுக்கும் அந்தப் பண்பு அந்த எளிய அத்தனை மக்களுக்கும் ஒருசேர எப்படி உள்ளது? உண்மையிலேயே அந்தத் தொகுதி மக்கள் வசிக்கும பக்கம் நோக்கி,கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது.
யாரைப் புகழ்வது? இந்த எளிய வேட்பாளரையா? இவரைத் தேர்ந்தெடுத்த அந்தத் தொகுதி மக்களையா? இவருக்கு தேர்தலில் வாய்ப்பளித்த பாஜகவையா? இந்த எளிய மனிதருக்கு கவனம் கொடுத்து பிரசாரமும் செய்து,மந்திரி பதவியையும் கொடுத்துள்ள பிரதமரையா?
இவர்களுக்கு இந்தப் பண்பு எப்படி வந்தது? இந்தக் கட்சியி்ன் தலைவரும், பிரதமரும்,வேட்பாளரும் ஆர்.எஸ்.எஸ் வளர்ப்பு என்பதனால் இருக்குமோ?
எத்தனையோ கோடீஸ்வரர்கள், ராஜ குடும்பத்தினர், சினிமா பிராபல்யங்கள் எனப் பலர் மந்திரி பதவிக்குக் காத்திருக்க, இந்த எளிய மனிதரைத் தேடிப் போய், அவருக்கு மந்திரி பதவியைக் கொடுத்து கௌரவிக்கும் இந்தப் பண்பு வேறு எந்த கட்சிக்கு,வேறு எந்தத் தலைவனுக்கு இருக்கும்?
இவை எல்லாம் தமிழ்நாட்டில் சாத்தியமா?
இதனை தமிழர்களாகிய நம்மால் நம்பத்தான் முடிகிறதா?
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க்குடியாம் நமக்கு #நேசமணி_டிரெண்டிங் மட்டுமே சாத்தியம்.☹️

No comments:

Post a Comment