வாழ்கை வளம் பெற இலகுவாக பின்பற்றக் கூடிய ஓர் ஆன்மீக சிந்தனை
இறை சக்தியை விட இயற்கை சக்தியே மேலானது என அநுபவ ரீதியான ஞானிகள் பலர் கூறுவர். இயற்கை சக்தி ஒருவனின் பாவ புண்ணிய கணக்குகளை அடிப்படையாக கொண்டது. ஒருவன் தன் எண்ணத்தால் செயலால் இன்னொருவனுக்கு காரணமில்லாமல் தீங்கு விளைவிக்க எத்தனிக்கும் போது தனது பாவ கணக்கை கூட்டிக் கொள்கிறான்.
அதே போல் தன்னுடன் எந்த தொடர்பும் இல்லாத ஒருவனுக்கு நன்மை செய்யும் போது புண்ணிய கணக்கை கூட்டிக் கொள்கிறான். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பாவ கணக்கு, புண்ணிய கணக்கை விட அதிகரித்துக் காணப்பட்டால் இயற்கை எனும் சக்தி அதனை சமப்படுத்த அந்த நபருக்கு தீய விளைவுகளைக் கொடுக்கும்.
அதே வேளை, ஒருவரது புண்ணிய கணக்கு ஒரு சந்தர்ப்பத்தில் பாவ கணக்கை விட அதிகமாக காணப்படின் இயற்கை சக்தி அவனுக்கு பாவ கணக்கு, புண்ணிய கணக்கு சமப்படும் வரை நன்மையான விளைவுகளைக் கொடுக்கும்.
ஒருவர் தற்சமயம் தீமையான பலன்களை அநுபவிப்பவராயின் அவரது பாவ கணக்கு சற்று அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். மாறாக, ஒருவர் தற்சமயம் நன்மையான பலன்களை அநுபவிப்பவராயின் அவரது புண்ணிய கணக்கு சற்று அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.
அந்த சந்தர்ப்பத்தில் புத்திசாலியான ஒருவர் பாவங்களை குறைத்து புண்ணியங்களைக் கூடுதலாக செய்ய முற்படுவார். ஒருவருக்கு நல்லது நடக்கும் போதே அவரால் ஏனையவருக்கு நன்மை செய்ய முடியும். தீய விளைவுகள் ஏற்படும் போது ஏனையோருக்கு நன்மை செய்வது கடினம். இதுதான் யதார்த்தம். இதுதான் வாழ்கையின் உண்மை. கஷ்டமான காலத்திலும் ஒருவர் இன்னொருவனுக்கு நன்மை செய்வானாயின் அது ஆச்சரியம்.
இருந்தாலும் அந்த புண்ணியத்திற்கு பெறுமதி அதிகம். இந்தச் சிந்தனையை உங்கள் அன்றாட வாழ்கையில் பின்பற்றுங்கள். உண்மை புரியும். ஆனால் நம்பிக்கையில்லாத இன்னொருவருக்கு இந்தச் சிந்தனையைத் திணிக்க வேண்டாம்
No comments:
Post a Comment