Friday 26 April 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

"காமராசருக்கு எங்கள் வீட்டு அசைவச் சாப்பாடு மிகவும் பிடிக்கும்..
'கண்ணதாசன் வீட்டிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வா' என்று அவரது உதவியாளர் வைரவனிடம் சொல்லிவிடுவார்.
அனேகமாக காமராசருக்கு 'நண்பர்கள் வீட்டுச் சாப்பாடு' என்று போனது எங்கள் வீட்டுச் சாப்பாடு மட்டுமாகத்தான் இருக்கும்.
அய்யாவின் உதவியாளர் வைரவன், தொலைபேசியில் அம்மாவிடம் சொல்லி விடுவார். ஆனால், காமராசருக்கு அசைவம் பல்லில் சிக்கிக்கொள்ளும்.
எனவே அம்மா, ஆட்டுத் தலைக்கறியை எலும்பை நீக்கி, நன்றாக நைத்து காமராசருக்கு என்று தனியாகச் செய்து கொடுத்து அனுப்புவார்.
ஒரு நாள் நான் சாப்பாடு எடுத்துக்கொண்டு அய்யாவின் இல்லத்திற்க்கு போனேன்.
அய்யா காமராசர் வராண்டாவில் ஈஸி சேரில் கைகளைத் தூக்கி பின் தலையோடு சேர்த்து, விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தார்.
நான் போய் நின்றதும், 'என்ன?' என்று ஒற்றை சொல்லில் கேட்டார்.
'சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்' என்றேன்.
தன் உதவியாளர் வைரவனிடம், 'வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்' என்று சொன்னார்.
திரும்பும்போது வைரவன், காமராசரிடம், 'சாப்பாடு கொண்டு வந்திருக்கிறது கவிஞரோட பையன்’ என்று சொல்லிவிட்டார்.
அவ்வளவுதான் காமராசர் என்னைப் பக்கத்தில் கூப்பிட்டு தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். அப்போது தான் காமராஜர் கை எவ்வளவு நீளம் என்பதைத் தெரிந்துகொண்டேன்.
என் உடம்பை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருந்தது அவர் கை.
'எங்கெ படிக்கிறே?' என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
'பச்சையப்பன் கல்லூரியில்’ என்று சொன்னேன்.
'காலேஜ் இருக்கும்போது சாப்பாட்டைத் தூக்கிக்கொண்டு ஏன் அலையிறே. இனிமெல் காலேஜுக்கு மட்டம் போட்டதா நான் கேள்விப்படக் கூடாது. ஒழுங்காப் படி, போ’ என்றார்.
நான் புறப்படத் தயாரான போது, திரும்பவும் பக்கத்தில் கூப்பிட்டு அணைத்துக்கொண்டார்.
'நல்லா படிக்கணும். அனேகமாக உங்கள் அப்பா உங்களுக்கு விட்டுட்டுப் போகப்போறது இந்தப் படிப்பு மட்டுமாகத்தான் இருக்கும்’ என்று சொன்னார்.
அன்று காமராஜர் சொன்னது மிகச் சரியாக இருந்தது. அப்பா காலமானபோது கடனில் அவரது சொத்துக்கள் கரைந்துவிட்டன. ஆனால், எல்லா குழந்தைகளும் நன்றாகப் படித்திருந்தோம்.
மூன்று பேர் டாக்டர்கள், ஒருவன் இன்ஜினீயர், நான் வக்கீல், ஒருவன் படத் தயாரிப்பாளர்.
அப்பாவுடைய சொத்து என்று, இன்று என்னிடம், வாசலில் நிற்கும் எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர் கார் மட்டும்தான் இருக்கிறது.
அந்த காரும்கூட காமராசர் அய்யா கொடுத்ததுதான்."
- காந்தி கண்ணதாசன் பேட்டியிலிருந்து .

No comments:

Post a Comment