வாழ்க்கை மலர்கள்: செப்டம்பர் 17*
*வாழ்வில் வெற்றி ஒளி வீசட்டும்*
சூடுள்ள பாத்திரத்தைக் கந்தைத் துணி உதவி கொண்டோ கொரடாவின் உதவி கொண்டோ, அடுப்பிலிருந்து இறக்கிப் பயன் காண்பது போல, கருத்து வேறுபாடு உடையவர்களோடு மனநிலையுணர்ந்து, அன்பு காட்டல், பொறுமை கொள்ளுதல், கடமையுணர்ந்து ஆற்றல் எனும் மூன்றிணைப்புத்திறன் கொண்டு பழகி வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும், அமைதியும் காணவேண்டும். இந்த முறையில் விழிப்போடு வாழ்வை நடத்தும்போது வெறுப்புணர்ச்சி என்ற தீமை அணுகாது. சினமும், கவலையும் எழா, வளரா. வாழ்வில் நாளுக்கு நாள் அன்பும், இரக்கமும், அமைதியும் ஓங்கும்.
இந்த விளக்கத்தை மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்டு கணவன்-மனைவி, பெற்றோர், மக்கள், உடன்பிறந்தோர், நண்பர்கள் என்ற எல்லா உறவுகளிலும் பயன்படுத்தி முதலில் வெற்றி பெறுங்கள். இதன் விளைவாக வெளி உலக மக்களிடம் கொள்ளும் தொடர்பிலும் உங்கள் வாழ்வின் மற்றெல்லாப் பகுதிகளிலும் வெற்றி ஒளிவீசும். போதனை மட்டும் போதாது. சாதனை செய்க.
*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
No comments:
Post a Comment