Thursday 22 December 2022

எப்போதும் ஆனந்தம்.

 எப்போதும் ஆனந்தம்.

நாம் நமது வாழ்வில் பிறர் ஏற்படுத்திய காயங்களை மனதில் தூக்கிக் கொண்டு செல்கின்றோம்.
எது முக்கியம், எது தேவையற்றது என்பதைப் பகுத்துப் பார்க்கத் தெரிந்து விட்டால் , வாழ்வு எப்போதும் ஆனந்தமாக இருக்கும்..
துறவிகள் இருவர் தொடர்ந்து பெய்த மழையினால் ஒரு குடிசையின் கீழ் வெகுநேரமாக நின்று கொண்டு இருந்தனர்.
மழை நின்றதும் தங்களது இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து செல்லும் போது, வழியில் ஓர் அழகான இளம்பெண் சாலையைக் கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
இதைக் கண்ட துறவிகளில் ஒருவர்,
"என்னாயிற்று பெண்ணே ஏதேனும் உதவி தேவையா" என்று கேட்டார்.
பதிலுக்கு அந்தப் பெண்,
"நான் என் தோழியின் திருமணத்துக்குச் செல்ல உள்ளேன். ஆனால், இந்தச் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது.
நடந்து சென்றால் நிச்சயம் என் அழகிய பட்டுப் பாவாடை பாழாகி விடும்" என்று கூறி வருந்தினாள்.
"கவலைப்படாதே, என் தோள்களின் மீது ஏறிக் கொள். நீ சேர வேண்டிய இடத்தில் உன்னைச் சேர்த்து விடுகின்றேன்" என்று கூறி விட்டு அவளுக்கு உதவி புரிந்தார்.
திரும்பி வரும் வழியில் தன்னுடன் இருக்கும் மற்றொரு துறவி கோபமாக இருப்பது போல அவருக்குத் தோன்றியது.
'ஏன் என் மீது கோபமாக உள்ளீர்கள்'' என்று கேட்க,
அதற்கு அவர் ''நாம் ஒரு துறவி என்பதை மறந்து விட்டு அந்தப் பெண்ணை எப்படித் தொட்டுத் தூக்கலாம்.
இது தவறானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா" என்று கேட்டார்.
உதவி செய்த துறவி,
"தூக்கிய அந்தப் பெண்ணை அப்போதே நான் தோளில் இருந்து இறக்கி விட்டேன், நீங்கள் தான் அந்தச் சம்பவத்தை இறக்காமல் மனதில் சுமந்து கொண்டு இருக்கிறீர்கள்"என்று கூறி விட்டுச் சென்று விட்டார்.
*அடுத்தவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை.*
*மற்றவர்கள் செய்த உதவியை விமர்சிக்காமல்,*
*உபத்திரவம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.*
*முடிந்தவரை யாருக்கும் கெட்டது செய்யாமல் இருக்க வேண்டும்.*
*நல்ல எண்ணம் கொண்டவர்கள் மனதில் அத்தகைய எண்ணங்கள் வராது. *

No comments:

Post a Comment