Thursday 29 December 2022

முன்னோடியாக இருங்கள்.

 முன்னோடியாக இருங்கள்.

நம்மில் பெரும்பாலானோர் சூழ்நிலைக்கு ஏற்ப இணக்கமாகச் செல்கிறோம். ஆனால் எப்போது இணக்கமாகச் செல்ல வேண்டும். எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
மற்றவர்களுடன் இணங்கிப் போவது என்பது ஒருவரின் பண்பினையும், பணிவையும் குறிக்கும்.
பணிவு என்பது சிலரின் கணிப்பில் இயலாமை என்று பிழையான எண்ணங்களைக் கருத்தில் கொள்ளாதீர்கள்.
இணங்கிப் போகிறவர்கள் கோழைகளும் அல்ல. அஞ்சி நடப்பவர்களும் அல்ல.
அவர்கள் அறிவுடன் கூடிய திறமையாளர்கள். இத்தகைய திறமையாளர்கள் எனப் பெயர் வரக் காரணம் இணங்கிப் போகும் அறிவும், புலமைக் கூர்மையும், திறமையும் தான் என்பதை யாரும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியதில்லை.
இருந்தாலும் அனைவருக்கும் பிடித்தாற் போல் இணங்கி வாழ்ந்து வந்தால் சில வேளைகளில் நாம் நம் சுயம் இழப்பது உறுதி.
ஓர் உயிருள்ள கிணற்றுத் தவளை , வீட்டின் சமையலறையில், அடுப்பில் பற்ற வைத்த தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து விட்டது.
தண்ணீரின் வெப்பம் கூடக் கூட தவளை தன் உடம்பின் வெப்பநிலையை சூழ்நிலை வெப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டே வந்தது.
அதன் தன்மை அத்தகையது. தண்ணீர் அதன் கொதிநிலையை (100℃) அடையும் போது வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முற்பட்டது.
ஆனால் முடியவில்லை. காரணம் உடலின் வெப்ப நிலையை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டே வந்ததால் அது வலுவிழந்துப் போய் விட்டது.
அதுமட்டுமல்ல , பாவம் சிறிது நேரத்தில் அந்தத் தவளையும் இறந்தே போய் விட்டது.
தவளையைக் கொன்றது எது. எளிதில் கூறி விடலாம், கொதிநீர் தான் தவளையைக் கொன்று விட்டது என்று.
ஆனால் உண்மை அதுவல்ல. எப்போது குதித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத தவளையின் அந்த இயலாமை தான் அதைக் கொன்று விட்டது.
இணங்கிப் போகும் ஒருவருக்கு, மற்றவர்களும் இணங்கிப் போவார்கள்.
நீங்கள் பிறருக்கு ''இணங்கிப் போவது'' என்கிற பாடத்தை, கற்பிப்பதில் முன்னோடியாகத் திகழுங்கள்.

No comments:

Post a Comment