Saturday 10 December 2022

உழைப்பும் ஒத்துழைப்பும்.

 உழைப்பும் ஒத்துழைப்பும்.

உண்மையில் மனிதர் எவரையும் கடினமானவர், எளிதானவர் என்று இனம் பிரிக்க முடியாது. ஆனந்தமானவர், ஆனந்தமற்றவர் என்று தான் வகைப்படுத்த முடியும்.
நீங்கள் கீழே பணி புரியும் உங்கள் பணியாளரிடம் கடினமானவராக நடந்து கொள்கிறீர்கள் என்றால், மகிழ்ச்சியற்று இருக்கிறீர்கள் என்று பொருள்.
உங்களுக்குக் கீழே பணி புரிபவர்கள் எங்கே உங்கள் தலை மீது ஏறி உட்கார்ந்து விடுவார்களோ என்ற சந்தேகம் தான் உங்களுடைய மகிழ்ச்சியைத் தின்று கொண்டு இருக்கிறது.
ஒரு குறிப்பிட்டவர் ம்கிழ்ச்ச்சியாக இருக்கும் போது, அவருடன் பணி புரிவது மிகச் சுலபமாக இருக்கும்.
அவரே மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும் நேரத்தில் அவருடன் இணைந்து செயலாற்றுவது கடினமாகி விடும்.
"நான் முதலாளி, அவன் தொழிலாளி" என்று தேவை இல்லாத அடையாளங்களை உருவாக்கிக் கொள்வதால், உள்ளே அகங்காரம் தான் வளர்கிறது. சந்தேகம் பிறக்கிறது, மகிழ்ச்சி தொலைகிறது.
உங்கள் நிறுவனத்திற்கு லாபம் கிடைத்துக் கொண்டு இருக்கிறது என்றால், உங்கள் நிறுவனத்தில் பணி புரியும் உங்கள் பணியாளர்களின் திறமையான உழைப்பும், அவர்களது ஒத்துழைப்பும் அதற்குக் காரணமேயன்றி, வேறு யாரும் இல்லை.
விளையாட்டோ, வியாபாரமோ, அலுவலகமோ எந்தத் துறை ஆனாலும், அங்கு பலர் ஒன்று சேர்ந்து தான் செயலாற்ற வேண்டி இருக்கிறது.
மொத்தக் குழுவும் முழுத் திறமை உடன் செயல்பட வேண்டும் என்றால், ஒவ்வொரு தனி நபரிடமும் அமைதியும், மகிழ்ச்சியும் குடி கொண்டு இருக்க வேண்டும். அப்போது தான், மொத்தமாக அந்தச் சூழலில் அமைதியும், மகிழ்ச்சியும் வேரூன்றி இருக்கும்.
எந்தத் துறை ஆனாலும் போட்டிகள் மிகுந்து விட்ட இந்த நாளில், எதிர்பாராமல் வந்து தாக்கும் பிரச்சனைகளே பல இருக்கும் போது, சக மனிதர்களையே பிரச்சனையாக்கிக் கொள்வது முட்டாள்தனம் அல்லவா.
சொல்லப் போனால் ஒவ்வொரு வர்த்தகத்திலும், நிறுவனத்திலும் அங்கு இருப்பவர்களைக் குறைத்து மதிப்பிடாமல், அவர்களுடைய மேம்பாட்டுக்காக, நல்வாழ்வுக்காக சிறிது நேரத்தை ஒதுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
அவர்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
மற்றவரைச் துச்சமாகப் பார்க்கும் பழக்கத்தை முதலில் விடுங்கள்.
ஒரு காட்டில், நான்கு எறும்புகள் நடந்து போய்க் கொண்டு இருந்தன. எதிரில் ஒரு யானை வந்தது. அதைப் பார்த்ததும், "டேய் என்னடா இவன் நம் வழியில் வருகிறான் கொன்று போடலாம் இவனை" என்று கொதித்தெழுந்தது, ஓர் எறும்பு.
இரண்டாவது எறும்பு,
"சீச்சீ, சின்னப் பயலாகத் தெரிகிறான். எனவே, கொல்ல வேண்டாம். அவனை நான்கு கால்களையும் உடைத்துப் போடலாம். அப்போது தான் அவனுக்குப் புத்தி வரும்" என்றது.
மூன்றாவது எறும்பு,
"அதெல்லாம் எதற்கு அவனைத் தூக்கித் தூர எறிந்து விட்டு, நாம் பாட்டுக்குப் போய் கொண்டே இருக்கலாம், வாருங்கள்" என்றது.
நான்காவது எறும்பு யானையை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்து விட்டு,
"இது நியாயமே அல்ல. நாம் நாலு பேர் இருக்கிறோம். அவன் ஒரே ஆள். நாலு பேர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவது நம் வீரத்துக்கும் அழகல்ல. யுத்தத் தர்மமும் அல்ல
ஆகவே, அவனை மன்னித்து,இப்படி நகர்ந்து வாருங்கள்" என்றபடி ஒதுங்கிப் போனது.நாம் நினைப்பது தான் சரி என்ற அகங்காரம் உள்ளே வந்து விட்டால், இந்த எறும்புகளைப் போலத்தான் யானைகளைக் கூடத் துச்சமாகப் பார்த்துத் தொலைப்பீர்கள்.
நீங்கள் விரும்பியதை அடைய, மற்றவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு அவசியம்.
எனவே, அவர்கள் உங்களிடம் நேசம் கொள்ளும்படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் மீது உங்களுக்கு உண்மையான அக்கறையும், அன்பும் இல்லாது போனால், இது சாத்தியமே இல்லை.
அப்படியொரு சூழ்நிலை அமைக்கப்பட்டு விட்டால், உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் முழுத் திறமையுடன் செயல்படுவார்கள்.
நீங்கள் அவர்களிடம் கடினமாக நடந்து கொண்டு தான் வேலை வாங்க வேண்டும் என்கிற அவசியமே இருக்காது.

No comments:

Post a Comment