Tuesday 18 February 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

'' தவறுகள் செய்யாதவர்கள்.''
................................
நம்மில் ஒரு சிலர் மற்றவர்கள் செய்த சிறிய தவறுகளை பூதக்கண்ணாடி போட்டுப் பெரிதாக்கி விடுவார்கள்.. ஆனால், அதே தவற்றை தாங்களும் செய்து இருப்பார்கள்.
விளையாட்டாக அடுத்தவர் பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.
சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம், உண்மையைத் தானே சொல்கிறோம் என்று மற்றவரின் பலவீனமான உண்மைகளையும் நல்லதல்லாத உண்மைகளையும் சொல்லக் கூடும்.
அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது.
“நம்முடைய எல்லா உண்மைகளையும் வெளியில் சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றித் தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?”
நாம் மனிதர்கள். நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன் எத்தனையோ தவறுகளை செய்து அதில் இருந்து கற்று இருக்கிறார்கள்;
எத்தனையோ பலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள்.
ஒரு சீடன் மற்றவர்கள் செய்த சிறிய தவறுகளைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான்.
அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு,
அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.
சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். “சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா”.
சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற செயலா? “குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?”
“ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வர முடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்து இருக்கிறாய்.
அவை யார் யார் வாயில் எப்படி எல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ?. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?”
அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது. கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.
ஆம்.,நண்பர்களே..
இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லது அல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரிய ஆர்வம் காண்பிக்காதீர்கள்.
நீங்கள் ஆர்வம் காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக் குறைத்து விடுவார்கள்.
அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லது அல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள்.
அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான செயல் அதுவாகத்தான் இருக்க முடியும்.
(ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி......)

No comments:

Post a Comment