Thursday 26 July 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இடம் மாறிப் பார்ப்போம்...
(இறையன்பு)
ரவிந்திரநாத் தாகூர் தன்னுடைய வங்காளம் குறித்த கடிதம் ஒன்றில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார். ஒருநாள் தன் பணியாளர் வராமல் போனதற்கு தாகூர் மிகுந்த கோபம் அடைந்தார். நாள் முழுவதும், அவன் வராததால் அவன் செய்ய வேண்டிய பணிகளை அவரே மேற்கொள்ள நேர்ந்தது. ஒவ்வொரு முறையும் அவருக்கு கோபம் வந்தது. அடுத்த நாள் அவன் பணிக்கு வந்த போது "ஏன் இவ்வளவு தாமதம் " என்று கடுகடுத்த முகத்துடன் குரலை உயர்த்திக் கடிந்து கொண்டார். அப்போது மிகவும் வருத்தத்துடன் அந்தப் பணியாள் "என் மகள் நேற்று இறந்துவிட்டாள். ஈமக்கிரியைகள் செய்ய வேண்டியிருந்ததால் என்னால் வர முடியவில்லை " என்றார்.
தாகூர் தொடர்ந்து எழுதுகிறார். "நம்மைச் சுற்றியும் நம்மிடமும் பணிபுரிபவர்கள் எத்தனை சோகங்களைச் சுமந்து கொண்டு பணிபுரிகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது " என்று.
தன் உடல் உபாதைகளையும், இதயக் கசிவுகளையும் கண்களுக்குள்ளேயே காய்ந்து ஆவியாகிவிடும் கண்ணீரையும் சுமந்துகொண்டு எத்தனை பேர் பணிபுரிகிறார்களோ? எல்லோரும் நம்மைப் போலவே சௌகரியமாக இருப்பதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். நமக்கு ஒரு துன்பம் வந்துவிட்டால் அதை தாள முடியாமல் துவண்டு போகிறோம்.
எத்தனை பேர் தன் மகளுக்கு திருமணமாகாத சோகத்துடன் பணிபுரிகிறார்ளோ, எத்தனை பேர் கணவனை இழந்து வருத்தத்துடன் காரியமாற்றுகிறார்களோ, எத்தனை பேர் புத்தி சுவாதீனமின்மையால், உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இதயத்தில் சுமந்து வருகிறார்களோ, எத்தனை பேர் தனக்கே இருக்கும் இரத்தக் கொதிப்பையும், இதயநோயையும், கல்லீரல் பிரச்சனை யையும், நுரையீரல் தளர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் பணியாற்றுகிறார்களோ - யார் கண்டது.
ஒரு வேளை நாம் அவர்களிடத்தில் இருந்திருந்தால்... நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது. அப்படிப் பட்ட சோகங்கள் பாரம் தாங்காமல் நாம் அப்பளம் போல நொறுங்கி விடுவோம் அடுத்தவர்கள் இடத்தில் நம்மை வைத்துப் பார்த்தால் அவர்கள் எவ்வளவு மேன்மையானவர்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
நாம் செய்பவற்றையே சாதனை என்றும், நாம் மட்டும் தான் கடமையிலிருந்து வழுவாதவர்கள் என்றும் நம்மைப் பற்றி ஒரு மாயத் தோற்றத்தை நாமே உருவாக்கி வைத்திருக்கிறோம். அது எவ்வளவு போலியானது என்பதை நம்மிலும் சிறந்தவர்களை காணும் போதுதான் புலப்படும்.
கொஞ்சம் இடம் மாறிப் பார்ப்போம்.
இடம் மாறி யோசிப்போம்...

No comments:

Post a Comment