Saturday 27 May 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின் இயக்குனர் நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார்.
நீதிபதிக்கு அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
"காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா?''
"இல்லை' என்று தலையாட்டினார் இயக்குனர்.நீதிமன்ற ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார்.
இயக்குனரின் கையில் இட்லிப் பொட்டலம் கொடுக்கப்பட்டது.
"பரவாயில்லை. இங்கேயே சாப்பிடுங்கள். அதற்குள் நான் இன்னொரு வழக்கு விசாரணையை முடித்துவிடுகிறேன்.''
இயக்குனரால் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. பேந்தப் பேந்த விழித்தபடி நின்று கொண்டிருந்தார்.
"என்ன ஒரு இட்லியை வைத்து விட்டீர்கள்? சாப்பிட்டுவிடுங்கள்.''
"முடியவில்லை ஐயா... என்னால் சாப்பிட முடியவில்லை.''
"பார்த்தீர்களா? உங்களால் சாப்பிட முடிந்தது மூன்று இட்லிதான். அதற்கு மேல் உங்கள் வயிற்றில் இடமில்லை. இதற்காகவா நீங்கள்
நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தீர்கள்? மனிதனின் அத்தியாவசியத் தேவைகள் மிகவும் குறைவானவை. அகந்தையின் தேவைகள்தான் அதிகம். உங்கள் வயிற்றுக்குத் தீனி போடுவது எளிது. அதற்கு நான்கு இட்லியே அதிகம். உங்கள் அகந்தைக்கு... நான்காயிரம் கோடி என்ன... நாற்பதாயிரம் கோடி கூடப் போதாது..''
இயக்குனர் பெரிதாக அழ ஆரம்பித்தார்.
அவர் மீதம் வைத்த அந்த நான்காவது இட்லி அவருக்கு மட்டும் இல்லை. நமக்கும் பல மகத்தான பாடங்களைச் சொல்லிக்
கொடுக்கிறது.
"தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நாடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே''
என்று ஒரு புறநானூற்றுப் பாடல் சொல்கிறது.
தென் தமிழகத்தையே ஒரு குடையின் கீழ் ஆளும் மன்னனுக்கும், பகலிலும் இரவிலும் தூங்காமல் விலங்குகளைப் பார்த்துக்
கொண்டிருக்கும் படிக்காத ஒரு வேடனுக்கும் உண்பதற்குத் தேவை கால் படி உணவு. மேலாடை, கீழாடை என்பது இதன் பொருள்.
இதை மனதில் வைத்துக்கொண்டு வாழத் தொடங்குவோம். மூர்க்கத்தனமாகப் பொருட்களைச் சேகரிக்கும் முட்டாள் தனத்தை விட்டு விடுவோம். கொண்டு போக முடியாத பொருளைச் சேர்ப்பதைவிட இருப்பதைப் பகிர்ந்து கொள்வோம்.
இந்த உலகம் நமக்குப் பயன்பட்டதைப் போல், வருங்காலத்தில் வருபவர்களுக்கும் பயன்பட வேண்டும். நாம் நுழைந்த போது இருந்ததைவிட, இன்னும் சிறப்பான நிலையில் இந்த உலகத்தை விட்டுவிட்டு மேலே செல்வோம். இப்படி செய்தால், நம்
உள்ளங்களில் மட்டுமல்ல... எதிர்கால சந்ததியின் இதயங்களிலும் மகிழ்ச்சி மலரும்.

No comments:

Post a Comment