Monday 19 September 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

Shared with thanks
# “கண்ணதாசன் ஒரு சித்தர்”
சமீபத்தில் ஒரு துறவி , என்னிடம் இப்படி சொன்னார்...!
ஏற்கனவே பல ஞானிகள் என்னிடம் இதை சொல்லி இருக்கிறார்கள்..!
எனவே நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..!
ஆனால்...இன்று நான் கேட்ட ஒரு பழைய பாடல்...என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது ..!
“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..”
எத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்தான் இது ..!
ஆனால் இன்று ஏனோ....இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே , மீண்டும் மீண்டும் உள்ளத்தின் உள்ளே ... ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு..அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன..!
“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”
.
# ....இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே....
அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை..?
நண்பர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன்...
“ அது வந்து....
அதாவது.... சிவனின் திருவிளையாடல்களில்
அதுவும் ஒன்று....
அதற்கு மேல்.... .... முழுசா தெரியலியே..!”
# சரி...பாடலை எழுதியவர் யார் என்று பார்த்தேன்..
கண்ணதாசன்...!
சும்மா எழுத மாட்டார் கண்ணதாசன்..! அவர் ஒரு வரி எழுதினால் ..அதற்குள்ளே ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்..!
அங்கும் இங்கும் தேடி ஓடி... சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையைப் பிடித்தேன்....அது இதுதான்...!
அந்தக் காலத்தில்....காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன் ..அவன் பெயர் அரதன குப்தன் ....மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்... காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும் தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை...
எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர ....உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் .... வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே... ஒரு புன்னைவனம் ..அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்..சற்றுத் தள்ளி ஒரு கிணறு...
கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு ....
அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!
காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்... கதறி அழுதாள் ...காரணம்...அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்...
நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது....தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் ....நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட...உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்...
சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.... அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே ஒரு தாலியைக் கட்டி , இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..”
மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்..
இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் ...அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான் ...!
இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.....கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்... ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல... அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..!
வழக்கு சபைக்கு வந்தது...
திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்...
“மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி...
முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ...அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?”
கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்....
கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ...தொழுதாள்....!
கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி.... “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்....?”
ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல்...
"நாங்கள் சாட்சி.."
குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க....
ஈசன் அங்கே நின்றாராம்...
“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்... அதற்கு நாங்கள் மூவருமே சாட்சி”
“ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...!
பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..!
இப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்... வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்....!
நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...?
ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன் ... ஆனால் அப்போது இந்தக் கதை தெரியாததால் கவனிக்கவில்லை..!
இனி போகும்போது தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்..!
# கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு...!
கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறதாம்..!
[ “பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறாராம் கல்கி..]
#.. கதையைப் படித்து முடித்த நான் , கண்ணதாசனை எண்ணி எண்ணி வியந்தேன்...!
“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ..?”
....கண்ணதாசன் எழுதிய இந்த ஒரு வரிக்குப் பின்னால் , இவ்வளவு பெரிய கதை இருக்கிறதே..! இந்தக் கதையை முழுவதும் படிக்காமல் , கண்டிப்பாக கண்ணதாசனால் அந்த ஒருவரியை எழுதி இருக்க முடியாது..!
சரி.... ஒரு பாடலுக்கே இப்படி என்றால் அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் இருக்கும்..?
அவற்றை தெரிந்து கொள்ள ,எத்தனை ஆயிரக்கணக்கான கதைகளை....நூல்களை..புராணங்களை...இதிகாசங்களை அவர் படித்திருக்க வேண்டும் ..?
# அத்தனையும் இந்த ஒரு ஜென்மத்தில் , எப்படி அந்த காவியத் தாயின் இளைய மகன் கண்ணதாசனுக்கு சாத்தியமாயிற்று ..?
“ஆம்...அவன் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் அவனுக்கு மரணமில்லை”
# கண்ணதாசன் வாசிக்க வேண்டியவர்
நன்றி ஆா் பாஸ்கர்

No comments:

Post a Comment