Thursday 25 August 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு நாள் ராஜா, இரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார் . இரண்டு மெய்க்காப்பாளர்களும் அவரோடு கூடச் சென்றனர்.
திடீரென்று கடுமையான மழையும், காற்றும் அடித்தன. வானம் இருண்டு போனது . தடுமாற்றத்தில் ராஜா காவலாளிகளை விட்டு வழி தவறிப் போய்விட்டார்.
எங்கும் காரிருள். மழையும் , காற்றும் வேறு பயமுறுத்தின. சற்று தொலைவில் ஒரு சிறு குடிசை தெரிந்தது . அதிலிருந்து லேசான வெளிச்சமும் வந்து கொண்டிருந்தது. ராஜா வேகமாக அதனை நோக்கி நடந்தார்.
சிறிது நேர நடையிலேயே குடிசையை அடைந்து , விரைவாய் உள்ளே நுழைந்தார். அதற்குள்ளே கந்தல் ஆடை அணிந்த ஒரு மனிதனைத் தவிர வேறு யாருமில்லை. ராஜா உள்ளே நுழைந்தும் அவன் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.
மாறு வேடத்தில் இருந்த போதிலும் , அவன் எழுந்து மரியாதை தராமல் அமர்ந்திருந்ததில் ராஜாவுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது .
"ஏம்ப்பா! உன் வீட்டுக்கு வந்திருக்கேன் , நீ மரியாதையே இல்லாம, ஒரு வணக்கம் கூட சொல்லாம உக்காந்திக்கியே " என்றார்.
பதிலுக்கு அவன் ,
" நீ தான் என் வீட்டுக்குள்ள அடைக்கலமா நுழைஞ்சிருக்க. எதுக்கு நான் வணக்கம் சொல்லணும் " என்றான்.
ராஜாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் எப்போதும் நகர்வலம் போகையில் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் உதவி செய்வதற்காக ஒரு பொற்காசு மூட்டையை இடையில்வைத்திருப்பார்.
அதை அவனிடம் பிரித்துக் காட்டி விட்டு மீண்டும் கேட்டார் ,
"பார்த்தாயா நான் எவ்வளவு பெரியவன் என்பதை ?
இப்ப எனக்கு வணக்கம் சொல்வாயா ?" என்றார்.
அவனும் பதிலுக்கு , " ஒரு ஏழை பக்கத்தில இருந்தும் ஒரு மூட்டை பொற்காசை நீயே வச்சிருக்கியே , உனக்கு எப்பபடி வணக்கம்
சொல்வது ?" என்றான்.
ராஜா கோபமாய் ஒரு காசை அதிலிருந்து எடுத்து அவனிடம் வீசி ,
" இப்ப வணக்கம் சொல்வாயா? " என்றார் .
காசைத் தொடாமல் அவன் சொன்னான்,
"ஒரு மூட்டை காசை வச்சுக்கிட்டு அற்பமா ஒத்தக் காசை வீசுறியே , உனக்கா வணக்கம் சொல்வேன் ? "
அரசர் இன்னும் உக்கிரமானார் . பாதி மூட்டையை அவனருகே பிரித்துக் கொட்டி விட்டுக் கேட்டார் ,
" எங்கிட்ட இருந்ததுல சரி பாதியைக் கொடுத்துட்டேன். இப்ப வணக்கம்
சொல்வியா ?" .
மெல்லிய புன்னகையுடன் அவன் சொன்னான் ,
" உங்கிட்ட இருக்குற அளவுக்கு இப்ப எங்கிட்டேயும் இருக்கே ! இப்ப நீயும் நானும் சமமாயிட்டோமே . சரிசமமா இருக்கிற உன்னை எதுக்கு மதிக்கணும் ? "
ராஜாவுக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது. மிச்சமிருந்த மூட்டையும் அவனிடத்தில் வீசி விட்டார் ,
" இருந்த எல்லாத்தையுமே கொடுத்துட்டேன் .
இப்பவாவது வணக்கம் சொல் " என்றார் .
அவன் சிரித்துக் கொண்டே சொன்னான் ,
" இப்ப உங்கிட்ட ஒன்னுமே இல்லை . ஆனா எங்கிட்ட ஒரு மூட்டை தங்கம் இருக்கு. இப்ப நீதான் எனக்கு வணக்கம் சொல்லணும் " என்றான். ராஜா வாயடைத்துப் போனார் .
செல்லமே!
எத்தனைதான் அள்ளிக் கொடுத்தாலும் மனித இதயம் திருப்திப் படுவதில்லை . நிரந்தரமான மரியாதை என்பது பணத்தைக் கொண்டு வாங்கும் பொருளுமில்லை. உண்மையான அன்பைப் பிறருக்குக் கொடு. அதுவே பலமடங்காக உனக்குத் திரும்பக் கிடைக்கும்

No comments:

Post a Comment